Saturday, November 5, 2011

காதல் கைகூ கவிதைகள்



உன் நினைவுகளால் உருகுமொரு மலர்
உனக்காக ஒரு மலருடன் இங்கே
உன் வரவை எதிர்நோக்கிய வண்ணம்...


என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன்
என்னுடன் பேசாது இருந்து விடாதே...
உன் மௌனம் என் உயிரற்ற உடலைக் கூட
அணுவணுவாய் அழித்துவிடும்...


இனிப்பை தேடினேன் இவ்வுலகெங்கும்
ஈற்றில் அறிந்து கொண்டேன்
அது உன் நினைவுகள் மட்டும் தான் என்று...

Friday, November 4, 2011

கவிதை கிடைத்துவிட்டது...

எமக்கொரு கவிதை கிடைத்து விட்டது...
புரிந்து கொள்ள துடிக்கின்றோம்
புரியவும் முடியவில்லை...

புரிந்தும் புரியாமலும் 
இங்கே இரு உள்ளங்கள் 
கவிதையாகிய காதலை 
புரிந்து கொள்ள காதல் வானில் பறக்கின்றன...

காதல்...


காதல் வந்தது...
கவிதை தந்தது...
கனவும் தந்தது...
காத்திருப்பும் தந்தது...- ஆனால்
கபடமற்ற என் உள்ளத்தை மட்டும்
களவாடிச் சென்றது...

Thursday, October 20, 2011

உழவர் வாழ்வு உயர்வுற வேண்டும் ...



உதிரத்தையே உரமாக்கி, வியர்வையை நீராக்கி
ஆதவனின் உதவிக்கரத்தை உயிராகக் கொண்டு 
அயராத உழைப்பால் உலகையே
அரவணைக்கும் உழவர் வாழ்வு
என்றும் உயர்வுற வேண்டும்....
ஆழ்மனதில் பதிந்துவிட்ட அவர்களின் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புக்கள்
அனைத்துமே நிறைவேற வேண்டும்...

விஞ்ஞானவுலகினிலே பற்பல தொழில்கள் - எனினும்
உலகமே வியந்து போற்றும் தொழில் இதுவன்றோ???
இது தொழிலா???
இல்லவே இல்லை 
இதுதான் மனித குலத்தின் உயிர்நாடி...

உலகின் பசித்துன்பம் தீர்த்து உலகை காக்கும்
உத்தமராம் இவர்தம் வாழ்வு மட்டும் 
இங்கே வறுமையில் தவிப்பது எதற்காக???
அரசின் கொள்கைகளா அன்றேல் இடைத்தரகர்களின் செயலா
இவர்தம் வாழ்வை உருக்குலையச் செய்கின்றன???  

உறுதியான வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் 
இவர்தம் வாழ்வினிலே...
அதுவே மனிதகுலத்தின் செழுமைக்கும் அடித்தளமாம்...

Wednesday, October 19, 2011

முழுமதியே!!!



கருணை நாயகமாய்
பட்சிகளுக்கு விடுதலையளிக்கும் முழுமதியே!!!
இங்கு என் இதயம் கட்டுப்பாட்டை இழந்து பறந்துவிட்டது
உன்னைக் கண்டவுடனேயே...

என் இதயத்தை உன் இதயத்தில் வைத்துவிடு
இன்றேல் பறந்துவிட்ட என் இதயம் ஆதரவின்றி துடித்துவிடும்...
ஆரவாரிக்கும் உயிரணுக்கள் கூட சிதைந்துவிடும்...
நிலையற்ற மனித வாழ்வில் 
என் இதயத்தை மட்டும் உன்னிடத்தே நிலைபெற செய்வாயா???


பட்சிகளைப் போல நானும் உனை விட்டுச் செல்ல முடியால்
உன்னையே சுற்றிவருகிறேன் - ஆனால்
நீயோ உன் கருணையுள்ளத்தால் எனக்கும் விடுதலை தருவதற்கு முயல்கிறாய்...
நானோ என்னுயிரை விட்டு செல்ல முடியாமல் தவிப்பது 
புரிகின்றதா அன்றேல் புரியவில்லையா???
முழுமதியே உன் செவ்விதழ்களை அசைத்து பதில் கூறமாட்டாயா???

மீண்டுமொரு மழலை வாழ்வு



வாழ்வின் வசந்த காலம்...
அது தான் மனித வாழ்வின் இலைதுளிர்காலமும் கூட ...
மீண்டுமொரு முறை வந்துவிடவேண்டும் என்வாழ்வில்
அவ் இனிய மழலை வாழ்வு....
என்றும் மலர்ந்த முகம்
உதிராத சிரிப்பு
உள்ளத்தை உருக்கும் குறும்புத்தனம்...
மீண்டுமொரு முறையேனும் வந்துவிட்டால்...

ஆஹா... அற்புதம்...
நினைத்தாலே தேனூறும் பருவமன்றோ???
செல்லக்கிளிகளாய் ஆனந்தவுலகில் பறந்திடலாம்
ஆயிரம் ஆயிரம் மழலை மொழிகளை பேசியவாறே...

சோகமே அறியாத சொர்க்க வாழ்வன்றோ அது???
ஆனந்தக்கடலில் முழ்கி ஆகாயத் தேவதைகளாய்
வாழ்ந்துவிடலாம்...
மாசற்ற மழலை வாழ்வு மீண்டுமொரு முறை வந்துவிட வேண்டும்...

உலகின் ஒளிரும் நட்சத்திரங்களாய் என்றும் வந்துவிட
மழலை வாழ்வு வேண்டும் - எனக்கு
மீண்டுமொரு முறையேனும் மழலை வாழ்வு வேண்டும்...

Sunday, October 16, 2011

இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன...

இதமான தென்றல் காற்றில்
இங்கே இரு இதயங்கள் பரிமாறப்படுகின்றன
இனி புயல்களும் எழலாம்...
அடித்துச் செல்லும் புயலில்
இதயங்களும் நொருங்கிவிடும்
ஆகவே உயிரான அன்பால் காத்துக்கொள்ளுங்கள்
பரிமாறப்பட்ட உங்கள் இதயங்களை...

மழலை...



சிகரங்கள் கூட தலை சாய்த்து விட முயல்கின்றன
உன் மழலைத்தனத்தைப் பார்த்து...
உன் மழலைச் சிரிப்பும் மழலை மொழியும் 
மலையாயிருந்த எம் துன்பத்தை
மின்னலாய் வந்து ஒரே நொடியில் அடித்துச் சென்றதே...
கருங்கற் பாறை கூட கனிந்து விடுகிறது உன் 
கனி போன்ற மழலை மொழிகளால்... 
உன் மலர்ப்பாதம் தன்மீது தவண்டதால் 
வன்பாறையும் மென்பாறையானதே... 

Friday, October 7, 2011

உன் கண்கள் செய்யும் வித்தைகளால்...



உனக்கு தெரியுமா
உன் கண்கள் செய்யும் வித்தைகளால்
என் உயிரணுக்கள் கொந்தளிப்பதையும்
என்னுள்ளம் வெந்து தனலாகிப் போவதையும்...

என்னவளே உன் கண்களையும் சற்று மறைத்துவிடு
இன்னும் சில காலம்
இதுவரை நீ செய்த வித்தைகளின் நினைவுகளுடன் 
வாழ்ந்துவிடுகிறேன்... 

மங்கையே!!!



மலர்களுடன் போட்டியிட எண்ணாதே
உன்னைக் கண்ட கலக்கத்தில்
படை வலிமையற்ற பூவுலக புன்னகை மன்னர்கள்
தன்மானம் அழிய முன் 
தம்முயிரை மாய்த்துவிடப்போகின்றார்கள்...

அவர்களின் மென்மையை வென்றுவிட்ட நீ
அவர்களைக் கொன்று கல்நெஞ்சாள்  ஆகிவிடாதே...
உன்னிடம் வெல்ல பூவுலகும் 
தயங்கியே நிற்கின்றது...

மௌனத்தால் கொல்லாதே...



மதியே! ஒரு வார்த்தையேனும் பேசிவிடு
உன் மௌனம் மரணத்திற்கான வழியன்றோ???
சிந்தித்துப் பாரேன் ஒரு கணம்
என்னுயிரின் நிலையாமையை...
அழித்துவிடு மதியே... அழித்துவிடு...
உன் மௌனம் காக்கும் உள்ளத்தை 
ஓரிரு கணத்தில் அழித்துவிடு...

மலர்களே!!!



பூந்தோட்டத்தில் புதிய மலரொன்று 
மலர்ந்துவிட்டது


மலர்களே உங்களை இனி தேனிக்கள் நாடாது
இப்புதிய மலர் ஒன்றே போதும் 
அவற்றின் வாழ்விற்கு...

Wednesday, October 5, 2011

மனித குலமே வாரீரோ!!!



உம்மிடம் என்ன தான் கேட்டேன்
எதற்காக இந்த புன்முறுவல்???
ஓ!!! மனித வாழ்வைப் பார்த்தா
அன்றேல் நல்வாழ்விற்கான வழிப்படுத்தலா???

தினம் தினம் இவ்வுலகில் நடந்தேறும் செயல்களால்
மனித மனம் அடிக்கடி துன்பக்கடலில் மூழ்கிவிடுகிறது தான்...
அதற்காகவா முறுவலிக்கின்றீர்கள்???
ஓ! தன்னம்பிக்கையற்ற மனித வாழ்வைப் பார்த்தா???

ஆமா... ஓரிரு நாட்களிலே முடியும் வாழ்க்கையாயினும் 
எவ்வளவு பூரிப்பு எம் முகத்தில்...
நீங்களோ துன்பத்தில் மூழ்கி 
அத்துன்பக் கடலலையால் உற்றாரையும் அடித்து செல்வீர்களே!
மனித வாழ்வில் கற்றுக்கொண்டது இதுதானா???
இதை விடுத்து உள்ளங்களை உவகை ஊட்டி 
கொள்ளையிடுவதற்காய் 
வாரீரோ மனித குலமே வாரீரோ!!!

காதல்



உணர்வுகளை ஸ்பரித்த நீ
என் உள்ளம் படும் அவஸ்தையை அறியாது
உடலை உருக்கி உயிரை எடுத்துவிட்டாய்...
இதனால் தான் என் உதிரமும் உறைந்துவிட்டது
உன் இனிமையான நினைவுகளில்...

உன் உயிர் தேவதையிடம்...



உதிராத புன்சிரிப்புடன் இருக்கும் இவ் றோஜாக்களை 
என் உயிரையே உருக்குகின்ற 
உனக்காக தினந்தோறும் சேகரித்து வைக்கின்றேன் 
நீயோ!!!
என் முன்னே இன்னும் வர மறுக்கின்றாய்...

உதிராத சிரிப்புடன் உனக்காக காத்திருக்கிறேன் 
என்றோ ஒரு நாள் வருவாய் என்ற நம்பிக்கையில்...
ஆனால், அகத்திலோர் ஏக்கம் 
இந்த றோஜாக்களை போல் விரைவில் வாடிவிடுவேனோ என்று தான்...

ஓடோடி வருவாயா
உன் நினைவுகளால் உருகிக்கொண்டிருக்கும்
உன் உயிர் தேவதையிடம்
உதிராத இவ் றோஜாக்களை பெறுவதற்காய்...

Monday, October 3, 2011

ஐ ஆம் சொறி



மனமே!!! 
மன்னித்து விடுவாயா
என்னை மன்னித்து விடுவாயா???
நான் எண்ணும் தவறான எண்ணங்களை 
மன்னித்து விடுவாயா???

உலகப்பற்றும் உயிர் மீது கொண்ட பேராசையும்
என் மனதை அலைபாயச் செய்கிறது தான்
யான் ஞானியுமல்ல துறவியுமல்லவே...
எனினும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறதே!
ஏதோ தவறிழைத்து விட்டதாய்
ஏதேதோ பயமுறுத்தல்கள்...

உன் உபதேசத்தில் மூழ்கிப் போன எனக்கு 
நீயோ புகட்டியது 
நல்லதை செய்,எண்ணு என்று தான்...
இதை உயிர் பிரியும் நேரத்தில் கூட 
கடைப்பிடிக்கச் சொல்லி மீண்டும் ஒரு வற்புறுத்தல்
நானும் உன் வழிநடத்தலிலே...
ஆனால், சில சமயங்களில் 
அயலவர்களின் நடத்தையைப் பார்த்து 
அவ்வாறே நடக்கலாமா என்ற எண்ணம்
நீயோ அந்த நேரத்திலும் 
"உன் இயல்பை விட்டுவிடாதே " என்கிறாய்
நானும் உடனே உன்னிடம் மன்னிப்பும் கோருகின்றேன்...

உயிர் துறந்தும் உயிர் வாழும் உத்தமர்களின் கருத்துக்களையும்
அறக் கருத்துக்களையும் ஊன்றி ஆராய்ந்தறிந்து 
வலுப்பட்ட நீ 
பூவுலக வாழ்வில் அகப்பட்டு நேரிய வழி தேடும் எனக்கு 
நல்வழி காட்டுவாயா மனமே...

Tuesday, August 16, 2011

ஏதேதோ உணர்வலைகளை...



பூங்கையிலொரு பூக்கூடை கொடுத்து
உன்னை தொலைதூர நோக்குடன்
படைத்துவிட்டான் பிரம்மன்
நீயோ உன் விழியம்புகளால் யாரைத் தான்
சாய்த்துவிட முயல்கின்றாயோ???



உன் புன்னகை சிந்திய முகத்தில்
ஏதேதோ உணர்வுகளின் வெளிப்பாடு...
உன் மௌனம் காக்கும் உள்ளம்
நெளிந்து வளைந்த முடிகளுள்
சிக்குண்ட உன் தாமரை முகத்தில்
பிரதிவிம்பமாகின்றதே!!!
இவை என் மனதை
துண்டு துண்டாகக் கிழித்து
ஏதேதோ உணர்வலைகளை...
தோற்றுவிட்டேன் உன்னிடத்தே நான்...

Sunday, August 14, 2011

கண்சிமிட்டும் நட்சத்திரங்களே!!!



உங்கள் புன்சிரிப்பிற்கு காரணம் தான் எதுவோ???
உலகின் உச்சியிலே இருப்பதனாலா அன்றேல்
உங்கள் எதிரி நிலாவை மென்று ஒளியைப் பெற்றுவிட்டதனாலா???


உங்கள் புன்சிரிப்பால் பூவுலக உள்ளங்கள்
கொள்ளையிடப்பட்டு விட்டன என்ற
புகார் உண்மை தானோ???
ஓ... நீ என்னையும் கொள்ளையிட
ஆயத்தமாகி விட்டாய் போல...


உன்னை உற்றுநோக்கிய என் விழிகள்
ஓரிரு கணப் பொழுதிலேயே
உன்னால் சிறை வைக்கப்பட்டு விட்டன தான்
பிணையில் விடக் கூட மறுக்கின்றாயே...
நான்... நான்... நான்...
மீட்கமுடியாதா என்னை???
ஆ... என்னை மீட்க பூரணநிலாவாக அவதாரம் எடுக்க
துணிந்து விட்டால் என் தேவதை...

Monday, August 8, 2011

நட்பென்ற வலையில் சிக்குண்ட எமக்கு...



சிந்தனைகளும் ஒன்றானது
செயல்களும் ஒன்றானது
நட்பென்ற வலையில் சிக்குண்ட எமக்கு...


அன்பால் உருகிய எம் உள்ளங்கள்
குதூகலமாய் பறக்கவே செய்தன
எல்லைகளற்ற உலகை நோக்கி...
விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும்
எம்மை துரத்தித் துரத்தி ஆட்கொண்டு விட்டன...


உன்னைக் கண்டு ஓரிரு நாட்கள் தான்
ஆகின்றன-என் வாழ்நாளில்
நீயே என் உள்ளத்தை
கொள்ளை கொண்டுவிட்டாய்
உன் குறும்புகளாலும் என் மேல் நீ
கொண்ட உரிமைகளாலும்...


இன்றும் என் மனதில் ஓரிரு சந்தேகங்கள்
என் மனதைக் கண்ணாடி போன்று
உன்னிடம் காட்டிக் கொடுப்பது யாரோ என்பதுதான்
அது, அது... இறைவனா???


இல்லை...இல்லை...இல்லவேயில்லை...
தெளிந்துகொண்டேன்
இது தான் எம் நட்பின் வலிமை என்று.

Sunday, July 24, 2011

காற்றோடு கலந்தன...



காற்றோடு கலந்தன-என்
உதிரத்தால் கலந்த உறவுகளின் வாழ்க்கை.
பயணிக்கின்றது, பயணிக்கின்றது-அது
A9 வழியே பயணிக்கின்றது.
பரந்தன்,கிளிநொச்சி,கொக்காவில்,
மாங்குளம் கடந்தும் பயணிக்கின்றது...


ஆனால், என் மனமோ பிறேக்டவுண் ஆகிவிட்டது.
முயற்சித்துப் பார்த்தேன் மறுத்தது
அது தன் பயணத்தை...
சிறிது நிமிடம் கண்களை மூடினேன்
அங்கே விருந்தோம்பலை இயம்பிய
எம் உறவுகள் புன்னகையுடன்...
மீண்டுமொரு விருந்திற்கு வருமாறு அழைத்தவாறே...
என் மனமோ மகிழ்ச்சியால் பூரித்தது... குளிர்ந்தது...


என் உள்ளத் தொலைக்காட்சியை நிறுத்தினார்
அருகிலிருந்த பயணி ஓமந்தை சோதனைச் சாவடி வந்துவிட்டதைக் கூறிக் கொண்டே...


அந்த நிமிடம் என் மனமோ ஏங்கியது
அந்த உறவுகளையும் அவர்தம் வாழ்வியலையும் எண்ணி
அவற்றைக் கூற என் மனம் துடித்தது-ஆனால்
கேட்பதற்கோ இருந்தது காற்றொன்றே...
எனினும் கூறினேன் என் உறவுகளின் உணர்வுகளை.


அக்காற்று சென்றதோ எவ்விடம் தெரியவில்லை...
எவ்வாறாயினும் அக்காற்று அவர்தம் வாழ்வில்
ஒளியேற்ற மீண்டும் தென்றலாய் வரும் என்ற
நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்ந்தேன்...

Friday, July 22, 2011

அம்மா...



அம்மா... அம்மா... அம்மா ...
என்று செல்லமாக அழைக்க
என் உயிர் அன்னையும் ஓடோடி வந்திடுவாள்
தன் செல்ல மகளின் சின்னக் குரல் கேட்டே...

அன்னை மடி கிடைத்து விட்டால்
ஆகாரமும் வேண்டாம் எனக்கு,
அமுதும் வேண்டாம் ...
ஆசையாய் படுத்துறங்க
தாய் மடி ஒன்றே போதும்.

உன் நினைப்பு வந்து விட்டால்
ஒரு நொடியும் ஒரு யுகமாகும்...
உன்னை பார்க்க புறப்பட்டால் பயணம் கூட
உள்ளத்தை உருக்குமம்மா...


கல்லூரிக்கு சென்று சில காலம் தான்.
உன் நினைவோ கல்வியைக் கூட
துரத்திவிட முயல்கிறது - ஆனால்
நீயோ என்னை கல்வி அமுதை
மென்று வரச்சொல்லி துரத்துகிறாய்...

என் உள்ளமோ அமைதி அடையாது
உன் நினைவில் உருகுகிறது
நீயும் இதை அறிந்தும் அறியாதவளாய்
உன் செல்ல மகளின் வாழ்விற்காய்
பிரிவுத் துன்பத்திலும் இன்பம் காண்கின்றாய்...

காலை வணக்கமாய்
என்னை துயில்லேழுப்ப வந்திடும் நீ
விடுதி அறை காற்றில்
பாசப்பிணைப்புடனே கலந்திருந்து,
நலம் பல விசாரித்து
ஈற்றில் குட் நைட்,கோட் ப்ளேசஸ் யு சொல்லி
உறங்க வைக்கும் வரை
அன்பாலே உருக்குகின்றாய்.
பின்பும் உன் கனவில் வந்ததாக காலையிலே
உரைக்கின்றாய்...
இதுவெல்லாம் உன் உயிரின் மீது
நீ கொண்ட அன்பின் வெளிப்பாடோ அன்றேல்
அம்மா என்றதன் தாற்பரியமோ???

Wednesday, July 20, 2011

நட்பு



நட்பு என்னும் நன்னூலை
உன் அறியாமையால் நலிவாக்கிவிடாதே
ஏனெனில் நட்பு என்பது
வெறும் வார்த்தையல்ல.
நட்பை உணர்ந்தவன் மூவுலகையும் அனுபவித்தவனே...

உதிரத்தால் ஒன்றல்லத் தான் _ ஆனால்
உதிரத்தால் கலந்த உறவுகள்
உதறிவிட்ட போதும்
உதவிக்கரம் நீட்ட
உயிராய் ஒரு நண்பன் கிடைத்து விட்டால் அதுவே
ஏழு பிறப்பிற்கும் நான் பெற்ற பேறாகும்...

Tuesday, July 19, 2011

இது தான் இறப்பா ...



இறப்பு என்பது உயிர் பிரிவதாக இருக்கலாம்- ஆனால்
பிரியும் உயிர் பிரிந்தே சென்றாலும்
நட்பும் நன்னடத்தையும் தர்மமும்
என்றென்றும் பிரிந்த உயிருடனேயே
உயிர் வாழும் - அது இறப்பா?
இல்லை அது தான் வாழ்வு...